சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக  பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைனில் அக்.19-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகளை வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “தமிழகத்தில் வரும் அக்.30-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், நிபந்தனைகளின்படி ஆன்லைன் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளத்தில் அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அக்.19-ம் தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான விவரத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தரவேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.