சென்னை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டி, ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர் ராதா கிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாட்கள் பயணமாக அக்.28ந்தேதி தமிழகம் வந்தடைந்தார். அவரது பயணத்தின் ஓர் முக்கிய நிகழ்வாக, கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று (ஆக்.29)வருகை தந்தார்.
அவருக்கு தமிழக அரசு சார்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் பாஜக முக்கிய நிர்வாகிகள், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் குடியரசு துணைத் தலைவரை வரவேற்றனர். தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 6.45 மணி அளவில் அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் சென்ற குடியரசுத் துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் உடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றார்.
தரிசனம் முடித்துவிட்டு இரவு 7.45 மணி அளவில் திரும்பிய குடியரசு துணைத் தலைவர், கோயில் வளாகத்தில் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியை பார்த்து ‘அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துகள்’ என கைகூப்பி வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் குடியரசு துணைத் தலைவர் தொடர்ந்து இன்று காலை விடுதியில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் வருகையொட்டி, மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் படைப் பாதுகாப்பு வீரர்கள், மதுரை மாநகர காவல் துறையினர் அடங்கிய ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பசும்பொன்னில் அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருவதால் பாதுகாப்புக்கு 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.