டெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்காளர்பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து, பாஜக மெஜாரிட்டியாக இருப்பதால், மசோதாவை எளிதாக நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்வதை தடுக்கும் வகையிலும், கள்ள ஓட்டு போடுவதற்கும் ஆப்பு வைக்கும் வகையிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்காகவும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அற்காக தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா தாக்கல் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். மாசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மக்களவையில் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் , இனி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப் படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்டமாகி அமலுக்கு வரும்.