சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார்.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பை மீறி வாக்காளர் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று செய்தியளாரகளை சந்தித்த திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ, நாங்கள் அச்சப்பட்டதுபோல, தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் நடத்துகிறது, இதனால் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஆவேசமாக குற்றம் சாட்டினார்.
எஸ்ஐஆர் தொடர்பாக திமுக எடுத்து வைத்துள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இதுவரை பதில் இல்லை என்றவர், எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பதில் மக்களிடையே பெரும் குழப்பம் உள்ளது. எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு உதவி செய்ய திமுகவினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ள சிக்கல்கள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை திமுக தொடர்ந்து கூறி வருகிறது என்றவர், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பொதுமக்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்ய உதவி வருகின்றனர் என்றார்.
பின்னர்எஸ்ஐஆரை அதிமுக ஆதரிக்கிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், எஸ்ஐஆர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகள் உண்மைக்கு புறம்பானது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகுதான் அதிமுகவுக்கு அதில் உள்ள சிக்கல்கள் தெரிகிறது. பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக எஸ்ஐஆருக்கு ஆதரவு அளிக்கிறது. பாஜகவும் அதிமுகவும் திமுக மீது கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி ஆகும். அதிமுகவின் நிலைப்பாடு தவறு என்பதை அக்கட்சியினர் உணர்ந்துள்ளனர் என்றார்.
மேலும், திமுக ஏன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை எதிர்க்கிறது என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். என்றவர், மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.தமிழ்நாட்டுக்கும் அசாமுக்கும் என்ன வித்தியாசம்; அங்கு எஸ்.ஐ.ஆர். இல்லை எஸ்.ஆர். மட்டுமே உள்ளது. பி.எல்.ஓ.க்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். முறையான பயிற்சி அளிக்கப்படாமல் பி.எல்.ஓ.க்களை மக்களிடம் அனுப்பி வைத்துள்ளனர். ஒரே ஒரு நாள் தேர்தல் நடத்துவதற்கு ஆணையம் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்றார்.
எஸ்.ஐ.ஆர்-ஐ நிறைவேற்றுவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. அஸாமில் கொண்டுவரப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில் மக்கள் எந்த விண்ணப்பமும் சமர்ப்பிக்க தேவையில்லை; அஸாமுக்கு ஒரு நிலைப்பாடு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாடா?
ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், மக்களுடைய வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும். தகுதியான ஒருவர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது” என்று கூறினார்.