சென்னை: சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என நீதிமன்றத்தில் தொரிவித்து உள்ளது.
இந்த வழக்கில், தூய்மை பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையி்ல் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின்போது அவர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி நுழைவு வாயில் முன்பாக ஆகஸ்ட் 1 தொடங்கிய இந்த போராட்டம் ஆகஸ்டு 13-ஆம் தேதி வரை இரவு பகலாக நீடித்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் தொடரப்பட்ட வழக்கின் முடிவில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று மாலை முதலே மாநகராட்சி வளாகம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியது. ஆனால், ‘முடிவு தெரியும் வரை கலைந்து செல்ல மாட்டோம்’ என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நள்ளிரவில் போராட்டக்கார்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச்சென்றனர்.
அப்போது, அவர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண், பெண் வழக்கறிஞர்கள், சட்டகல்லூரி மாணவ மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டதிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்த பெண் வழக்கறிஞர்களான வளர்மதி, ஆர்த்தி போன்றவர்களை மப்டியில் இருந்த பெண் காவலர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. மேலும், அவர்களை கைது செய்தபோது சில ஆண் காவல்துறையினர், அவர்களின் உடலின்மீதும், துணிகளை இழுத்தும் அசிக்க படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி கூறும்போது, இரவு சுமார் 11.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டனர். அவர்களை சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.
என்னையும் சக வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச்சென்றனர். தன்னை “இரவு முழுக்க பெண் காவலர்கள் அடித்தனர். ஒருவர் கூட சீருடையில் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா எனக் கேட்டு அடித்தனர்” என குற்றம் சாட்டி உள்ளார். அதுபோல மற்றொரு பெண் வழக்கறிஞரான வளர்மதி, காவல்துறையினர் தன்னை “வேளச்சேரியில் வளைத்து கைது செய்தாக கூறியிருந்தார்.
கைது செய்யப்பட்ட “இருவரையும் இரவு 2 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு கூட்டி வந்துள்ளனர். அங்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்” என்று வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கில், ‘நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ஏன் கைவிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துகள் மட்டுமின்றி போலீஸாரும், தனிநபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை கைவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றார்.
அதற்கு நீதிபதிகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டுமா? என்றும், இந்த விவகாரத்தில் மறப்போம், மன்னிப்போம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கலாமே, போலீஸார் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே, என்றனர்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு செயல்படுகிறது. மாநகராட்சியில் 11 வார்டுகள் ஏற்கெனவே தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், தற்போதைய போராட்டம் உள்நோக்கம் கொண்டது. தூய்மைப் பணியாளர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். போலீஸார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம், என்றார்.
அப்போது மனுதாரர்கள்தரப்பில், 2 பெண் வழக்கறிஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதால் அவர்களை அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்துள்ளனர். எனவே இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கலாம், என கருத்து தெரிவித்தனர்.
ஆட்கொணர்வு வழக்கில் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும், எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.