கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று (05.11.2021) புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது நடந்திருக்கக் கூடாது, அவரின் மறைவை என்னாலும், என் குடும்பத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மா, அப்பா மிகுந்த கவலையில் இருக்கின்றனர். புனித் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டேதான் இருப்பார். தற்போது அவர் மறைந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் சிரித்துக்கொண்டே இருக்கட்டும். அவரின் மறைவில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் ” எனக் கூறியுள்ளார்.