டெல்லி: வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவுக்கு எதிராக  நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கைஉச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

தலைநகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வா்மா. இவரது வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில்  ஏற்பட்ட  தீ விபத்தில், வீட்டின் ஒரு அறையில், கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது. பணத்தை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த நிலையில், அந்த மூட்டை தீயில் எரிந்ததால், பாதி எரிந்த நிலையில்,  கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.திடீரென ஏற்பட்ட இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவர் பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் நீதிபதி வர்மா குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. அந்த குழுவும் விசாரணை நடத்தி, நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

இந்த விவகாரத்தில், ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற் கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த வர்மா தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதனிடையே, யஷ்வந்த் வர்மா தரப்பில், விசாரணைக் குழு பரிந்துரை மூலம் ஒரு நீதிபதியை நீக்குவது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், “அப்போதைய தலைமை நீதிபதியும் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர். புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவேற்றுவது அவசியமில்லை என்று கருதப்பட்டது, குறிப்பாக அந்த நேரத்தில் எந்த ஆட்சேபனையும் மனுதாரரால் எழுப்பப்படவில்லை.

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு விசாரணை அறிக்கையை அனுப்புவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.