சென்னை: ‘‘தமிழகத்தில் உள்ள நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு ‘லைஃப் ஜாக்கெட்’ மானிய விலையில் வழங்கப்படுகிறது’’ என மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, 14 கடலோர மாவட்டங்களில், நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு, 75 சதவீதம் மானியத்தில், ‘லைப் ஜாக்கெட்’ வழங்கப்படுகிறது’ என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தேவைப்போடுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடலில் மீன்பிடிக்கும் போது இயற்கை சீற்றங்கள் அல்லது விபத்து உள்ளிட்ட காரணங்களால் படகு கவிழ்ந்து அல்லது படகில் செல்லும் போது தவறி விழுந்து மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதைத் தவிர்க்க படகில் செல்லும் அனைவரும் கட்டாயம் உயிர் காக்கும் கவச உடையான ‘லைஃப் ஜாக்கெட்’டை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  நடப்பு நிதியாண்டில்  மீனவர்களுக்காக 40 ஆயிரம் லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த லைப்ஜெக்கெட்டை மானிய விலையில் பெற , சம்பந்தப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதாவது,  பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு வைத்திருப்போர் அந்தந்த மாவட்ட மீன்வள அலுவலகங்களில்  லைப் ஜாக்கெட்டக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,  ஒரு படகுக்கு 4 லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

லைப் ஜாக்கெட் ஒன்றின் விலை ரூ.2,472. இதில், 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப் படகு உரிமையாளர்கள் பயன் பெறுவர் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.