சென்னை: திமுக ஆட்சியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தம் போட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார்.
திமுக ஆட்சியில் ஊழலில் கொடிகட்டி பறக்கும் துறை எது என்று போட்டி வைத்தால் பதிவுத்துறை தான் வெற்றி பெறும் என்று கூறும் அளவுக்கு அந்தத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாயை கையூட்டாக கொடுத்து ஏமாந்த ஒருவர், குடிபோதை யில் அந்த அலுவலகத்திற்கு சென்று பதிவாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தமக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி தகராறு செய்யும் காணொலி செய்தித் தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பதிவாளர் அலுவலகங்கள் தான் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன என்பதை இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.
திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகராறு செய்தவரின் பெயர் குப்பன் என்றும், வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி கையூட்டுக் கொடுத்து காரியங்களை சாதிப்பவர் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அவருக்கு காரியம் சாதித்து தருவதாக கையூட்டு வாங்கிய அதிகாரிகள், அதை செய்து தராததன் காரணமாகவே தகராறு செய்ததாகவும் தெரிகிறது.
குடிபோதையில் திளைக்கும் ஒருவர் எந்த தயக்கமும் இல்லாமல் அரசு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவாளர் இருக்கையில் கம்பீரமாக அமருகிறார்; அவரைத் தடுப்பதற்குக் கூட எவரும் முயலவில்லை என்பதிலிருந்தே, அந்த அலுவலகத்தில், அவரும், அவர் கொடுக்கும் கையூட்டும் எந்த அளவுக்கு ராஜ்ஜியம் நடத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், ஊழலில் கொடிகட்டி பறக்கும் துறை எது என்று போட்டி வைத்தால் பதிவுத்துறை தான் வெற்றி பெறும் என்று கூறும் அளவுக்கு அந்தத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளது. அதற்கு காரணம் அமைச்சர்கள் நிலையிலிருந்து அதிகாரிகள் நிலை வரைக்கும் ஊழலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
திமுக அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ஊழலும் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒன்னும் ஒரிரு வாரங்களில் பதவிக்காலம் முடிவடைவதற்கும் என்னென்ன அவலங்கள் நடக்குமோ? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அறிக்கையில், : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியர்-உத்தண்டி இடையே ரூ.2,100 கோடியில் உயர்மட்டச்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த டிச.24-ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
உயர்மட்டச்சாலை அமைக்கும் பணியை கேஎன்ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகையைவிட ரூ.700 கோடி குறைவான செலவில் முடித்து தருவதாக, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த நிலையில், அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்ட திமுக அரசு, கேஎன்ஆர் நிறுவனத்துக்கு ரூ.2,100 கோடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
கேஎன்ஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காகவே திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியை திமுக அரசு திட்டமிட்டு தள்ளுபடி செய்திருக்கிறது. ரூ.700 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடவேண்டும் என்றார்.
