விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் சய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இன்று ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரம் விழா அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவையொட்டி, 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா ஜூலை 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிலையில், தினசரி ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 24-ந்தேதி 5-ம் திருநாள் அன்று 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து 6ந்தேதி 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
9-ம் திருநாளான இன்று (28-ந்தேதி, திங்கட்கிழமை) ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இன்றுஅதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க கடக லக்னத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.
இந்த தேரோட்டத்தில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை யொட்டி, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா…, கோபாலா… என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.