நாகை:  இலங்கை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  தமிழக  மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி , பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலை உள்பட மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். இதுதமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 8-ம் தேதி காலை  நாகை மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேருடன் ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த  இலங்கையை சேர்ந்த 9 கடல் கொள்ளையர்கள், தமிழக மீனவர்களிடம்  கத்தியைக் காட்டி மிரட்டி   தாக்கியதுடன், அவர்களது வலை மற்றும் உபகரணங்களைப் பறித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 5 தமிழக மீனவர்களும் நாகை திரும்பினார்.

இதற்கிடையில், மற்றொரு படகில் சென்ற  5 மீனவர்கள் மீதும், இன்னொரு படகில் சென்ற  4 மீனவர்கள் மீதும்,   இலங்கை கடல்கொள்ளையர்கள் தாக்குதல்நடத்தி அவர்களிடம் இருந்து,  ரூ.6 லட்சம் மதிப்பிலான 800 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்களை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர், படகில் இருந்த 200 கிலோ வலைகள் மற்றும் 50 கிலோ மீன்களைப் பறித்துச் சென்றனர்.

காயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,தாக்குதல் சம்பவம் குறித்து கீழையூர் கடலோரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  புகாரின்பேரில் கடலோர காவல் குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.