சென்னை:  தீபாவளி பண்டிகைக்காக சென்னை உட்பட முக்கிய நகரங்களில்  இன்று முதல்  அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பல லட்சம் பேர்  சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா ஸ்தலங்களுக்கும் செல்ல முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் சுமார் 14ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை  அறிவித்து உள்ளது. மேலும், பயணிகளின் கூடுதல் வசதிக்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்கவும் முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்த முறைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தாலும், அதை மீறி,  ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

தீபாவளியையொட்டி, கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோ ஆய்வு செய்தனர்.  அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்த பேருந்துகள் மற்றும் தனியார் போன்றவை  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும்,  அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தொடர்பான தகவல்கள் பெறவும் புகார்கள் தெரிவிக்கவும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தீபாவளி சிறப்பு பேருந்துகள்,   கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து எந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்கிற விவரத்தையும் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருந்து ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளத.

மேலும்,  அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் புகார்களைத் தெரிவிக்கவும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு பேருந்துகள் தொடர்பாக  7845700557, 7845727920, 78457 40924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேருந்து விவரங்களை அறியலாம்.

அரசு பேருந்துகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க 9445014436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 044 2474900, 26280445, 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.