சென்னை

தெற்கு ரயில்வே கடந்த 2023-24  நிதியாண்டில் ரூ. 12000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 

 தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரயில் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி தெற்கு ரயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். 

இதில் பயணிகள் ரயில் சேவை மூலம் ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரயில்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடியும், இதர வருவாய் மூலம் ரூ. ஆயிரத்து 194 கோடியும் வசூலாகியுள்ளது. இது தவிர, பாரத் கவுரவ் ரயில்கள் மூலம் ரூ.34 கோடியும் வசூலாகியுள்ளது. ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் ரூ.20 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

2023-24-ம் நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, திருவனந்தபுரம்-காசர்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூர், சென்னை-மைசூர் இடையே 8 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதேபோல, ரயில்வே நிர்வாகம் சார்பில் அனைத்து வழித்தடமும் மின்மயமாக்கும் பணியும், தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையில் 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி கிடைத்தது. மேலும், ஆயிரத்து 272 கி.மீ. தொலைவிலான பல்வேறு வழித்தடத்தில் ரயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் 170 ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.”

என்று கூறப்பட்டுள்ளது.