சென்னை

பராமரிப்பு பணிகள் காரணமாகச் சில ரயில் சேவைகளைத் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

”தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12641) வருகிற 26-ந் தேதி மற்றும் மே 1, 3, 8, 15, 17 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை, வெள்ளிக்கிழமை), ரத்து செய்யப்படுகிறது. அதே போல, ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12642) வருகிற 29-ந் தேதி மற்றும் மே 4, 6, 11, 18, 20 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை, சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சிறப்பு ரயில் (06097) வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. அதே போல, பார்மரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரயில் (06098) மே 3 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை எழும்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (22663) மே 4, 11, 18 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ஆகிய வழித்தடத்திற்கு பதிலாக, ரேணிகுண்டா, சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிபேட், பல்ஹர்ஷா, ஆகிய வழித்தடத்தில் செல்லும் .

அதே போல, ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (22664) வருகிற 30-ந் தேதி மற்றும் மே 7, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மேற்குறிப்பிட்ட வழித்தடத்திலேயே செல்லும்” 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.