டெல்லி: ”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியால் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று மும்பை வந்த பிரதமர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவரும் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவும் வந்தனர்.
ஸ்டார்மரின் முதல் அதிகாரப்பூர்வ இந்திய வருகையின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் இருதரப்பு உறவுகளில் புதிய ஆற்றலைச் செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,”பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். நவீன எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் சார்ந்த பாதுகாப்பை பலப்படுத்த முழு அர்ப்பணிப்புடன் நாங்கள் உள்ளோம். உக்ரைன், காசா விவகாரங்களில் அமைதியை திரும்ப கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்,” என்றார்.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலமை, இங்கிலாந்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை திறக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
பின்னர் பேசிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், காகிதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை விட நம்பிக்கையின் அடிப்படையில், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறினார். உலகின் 3-வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க அவர் வாழ்த்தும் தெரிவித்தார். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை மோடி இலக்காகக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தான் இங்கு வந்ததிலிருந்து காணும் அனைத்தும் அந்த இலக்கை எட்டுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருவதற்கான சான்றாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டருக்கு சென்றனர். அப்போது, அங்குக் காட்சிப்படுத்தப்ப ட்டிருந்த கைவினை பொருட்களை ஸ்டார்மர் ஆர்வமுடன் பார்வையிட்டார். பின்னர் குளோபல் ஃபின்டெக் விழாவில் இரு தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்தையும் ஜனநாயகப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார். மேலும், தொழில்நுட்பம் என்பது வெறும் வசதிக்கானது மட்டுமல்ல, சமத்துவத்திற்கானதும் தான் எனக் கூறினார். மேலும், அணுசக்தித் துறையில் இனி தனியார் பங்களிப்பும் அனுமதிக்கப்படும் எனவும் அப்போது அவர் அறிவித்தார்.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை உருவாக்குவது என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். இங்கிலாந்து பிரதமர் பேசும்போது, இங்கிலாந்தும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் எனவும், தங்கள் நாட்டுடன் வர்த்தகம் செய்ய இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
இரு நாட்டின் திறமைசாளிகளும் ஒன்றிணைந்து பணியாற்றினால் சிறப்பான வளர்ச்சியை பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம், தடையில்லா வர்த்த ஒப்பந்தம் கையெழுத்து, அதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை இவை அனைத்தும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளன.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது, இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவின் அதிகப்படியான வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். அவருடன் அந்நாட்டை சேர்ந்த தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் வருகை வந்தனர். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்டார்மர் இந்தியா வருவது இதுதான் முதல்முறை. மும்பையில் உள்ள ராஜ்பவனில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை, பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இணையற்ற பொருளாதார வாய்ப்புகளைத் திறக்க தலைவர்கள் உறுதியளித்தனர். ஜூலை மாதம் லண்டனில் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஸ்டார்மர் 125 பேர் கொண்ட குழுவுடன் வந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் படி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவுகளைக் குறைக்கும், அதே நேரத்தில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மோடி வலியுறுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் விஸ்கி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதன இறக்குமதிகள் மீதான வரிகளை இந்தியா கணிசமாகக் குறைக்கும்.
பிரிட்டன் அதற்கேற்ப இந்திய ஆடைகள், காலணிகள் மற்றும் உறைந்த இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்கும்.
இந்த வர்த்தக ஊக்கம் இரு நாடுகளின் தொழில்கள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கும் என்று இந்தியப் பிரதமர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் புதிய ஆற்றலைக் குறிக்கும் வகையில் ஸ்டார்மரின் வருகையை அவர் விவரித்தார். இரு நாட்டு மக்களுக்கும் ஒன்றாக இணைந்து ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் சுமார் $54.8 பில்லியனாக உள்ளது. இந்த வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் இரு பொருளாதாரங்களிலும் 600,000 க்கும் மேற்பட்ட வேலைகளை ஆதரிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியா பிரிட்டனை விஞ்சி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் கதையையும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற அதன் லட்சியத்தையும் ஸ்டார்மர் ஒப்புக்கொண்டார்.
இந்த பொருளாதார மைல்கல்லை அடைய இந்தியா தொடர்ந்து பாதையில் உள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பொருளாதாரப் பயணம் முழுவதும் இந்தியாவுடன் கூட்டு சேர பிரிட்டனின் விருப்பத்தை ஸ்டார்மர் உறுதிப்படுத்தினார்.
பிரிட்டிஷ் தலைவர் தனது வருகையை பரஸ்பர நன்மைக்காக வர்த்தக ஒப்பந்தத்தின் திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாக விவரித்தார். பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் அறிவித்தனர். இந்திய வளாகங்களை நிறுவும் ஒன்பது பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவு உட்பட கல்வி உறவுகளை மேம்படுத்துவதற்கும் அவர்கள் உறுதியளித்தனர்.