தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு அனுமதி வழங்குவது பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் முதல் தலைவராக முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் 2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு சேய்வதற்கான தேர்வுக்குழு கடந்த ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவுக்கு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலராக முதல்வரின் செயலராக உள்ள 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நா.முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.