சென்னை: நாளைய மாநாட்டில் சந்திப்போம்.  மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம், தொண்டர்கள் கவனமுடன் வாருங்கள் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிவித்து உள்ளார்.

நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநாட்டு திடல் உள்பட அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று, விழா மேடை மாநாட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில்,  நாளை மாநாட்டில், மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்,  மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்  என தொண்டா்களுக்கு, அந்த கட்சியின் தலைவா் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.

பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே, மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் .

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.

போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.

நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.  மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.

தோழமையுடன், உங்கள் விஜய்