டெல்லி: மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிக்க முழுமையாக தடை செய்ய முடியாது என்று கூறியதுடன், பசுமைப் பட்டாசுகள் வெடிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில், தீபாவளி, காளிபூஜை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய பண்டிகை நாள்களில் 2 மணி நேரம் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மம்தா தலைமையிலான மாநில அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், கொரோனா பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மாசை கருத்தில் கொண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளின்போதும் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்துப் பட்டாசுகளும் விற்பனை செய்யவும் வெடிக்கவும்  தடை விதித்து  உத்தரவிட்டது. அதையடத்து, மம்தா தலைமையிலான மாநில அரசும் பட்டாசு வெடிக்க தடை என உத்தரவிட்டது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள்  சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற  நீதிபதி கன்வில்கர் தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “பட்டாசுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது; போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்”. மாசு அதிகம் உள்ள இடங்களில் பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல மேற்குவங்கத்தில் காற்றின் தரம் சரியான அளவில் (moderate) இருக்கும் இடங்களில் மட்டும் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம். அதுபோல பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்’ என்று கூறி மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க  அனுமதி வழங்கியுள்ளார்.