சென்னை: குப்பை அள்ளும் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து, சென்னையில் உள்ள 4 மண்டல தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இரவு பகலாக நடத்தி வரும் போராட்டம் இன்று 11வது நாளாக நீடித்து வருகிறது.
இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சியான திக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், பாமக, நாம் தமிழர், அமுமுக மற்றும் பல தொழிற் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டவில்லை, மிரட்டல் விடுக்கும் போக்கே தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு, பகலாக அங்கேயே தங்கி, நேற்றும் 11வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் 7 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளதுடன், இரவு நேரத்தில் அமைச்சர் சேகர்பாபு சென்று மிரட்டியது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
“இந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எங்களை அப்புறப்படுத்துவதை பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரிடம், திமுக கவுன்சிலர்கள் பணத்தாசை காட்டி, இந்த போராட்டத்தை கலைக்க பார்க்கின்றனர்” என்று என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி, “எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பியதாக வரும் தகவல் அனைத்தும் பொய்” என்றார்.

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதுபோல நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம், “நாடு முழுவதும் தனியார் மயமாகி வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு துறைகள் தனியார் மயமாகிறது. இருப்பினும், ஏற்கெனவே பெற்று வரும் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் தூய்மை பணியாளர் போராட்டத்துக்கு தீர்வுகாண நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்’’ என்றார்.
நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது, நகரத்தை சுத்தம் செய்யும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? பின் எதற்காக மாநகராட்சி இருக்கிறது? தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நிதி இல்லை என்கின்றனர். ஆனால் மதுரையில் ரூ.200 கோடியில் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் நூலகம் கட் டியிருக்கின்றனர்.

இதுபோன்ற தேவையில்லாத செலவுகள் செய்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது எந்தவகையில் நியாயம்? இதனால் இன்றைக்கு குப்பை அள்ளும் மக்கள் போராட்ட களத்துக்கு வந்துவிட்டனர். எனவே 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாமக பொருளாளர் திலகபாமா போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ‘
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
‘பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்துக்குரியது’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel