
டில்லி
சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை தொடருமா என்பது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் முடிவுகளில் யோகியின் கோரக்பூர் மற்றும் கேசவ் வின் புல்பூர் ஆகிய தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி உள்ளது. இந்த இடைத் தேர்தல்களில் கடும் விரோதம் கொண்ட கட்சிகள் எனக் கூறப்பட்ட சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் வாதி கட்சியும் கூட்டணி அமைத்திருந்தன, இந்த வெற்றியை கொண்டாடும் வண்ணம் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சி வழக்கப்படி சிவப்பு தொப்பி அணிந்து வந்திருந்தனர்.
நேற்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எங்களின் வெற்றிக்கு யோகியின் அரசு மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பும் ஒரு காரணம் ஆகும்.
நானும் எனது கட்சியும் எங்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கூட்டணி வரும் 2019 ஆம் வருட நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம்”என தெரிவித்தார்.