சென்னை: சென்னைவாசிகள் தாங்கள்  வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது.

செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் அதற்கான நடவடிக்கைகடிள தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.

 செல்லப்பிராணிகளுக்கு (நாய்/பூனை) உரிமம் பெறுவது கட்டாயம் என்றும்,   உரிமையாளர்கள் நவ.23-க்கு முன் ஆன்லைனில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி உரிமம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்- மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதுவரை 3,401 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. (கடந்த ஆண்டு 9,034 உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன).

மேலும்,  வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் பற்றிய நம்பகமான தகவல்களை சேகரிக்கும் நோக்கில், நவ.24 முதல் சென்னை மாநகராட்சி (GCC) அனைத்து மண்டலங்களிலும் உள்ள வீடுகளுக்கு தனது பணியாளர்களை அனுப்பிச் செல்லப்பிராணிகள் கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளதாகவும்,     இந்தக் கணக்கெடுப்பின்போது, செல்லப்பிராணிகளுக்கு உரிமம் (License) இல்லாத குடியிருப்பாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் நவ.23-க்கு முன்பு நாய் மற்றும் பூனைகளுக்கான உரிமத்தை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்,  செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அதற்கான பணிகள் , அக்.8 முதல் தொடங்கும் என்றும், சென்னையில் உள்ள 6 கால்நடை மருத்துவமனைகளில் (திரு.வி.க. நகர், புலியந்தோப்பு, கண்ணம்மா பேட்டை, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம்) இலவசமாகச் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சென்னை  மாநகரத்தில் இதுவரை 105 நாய்களுக்கு மட்டுமே மைக்ரோசிப்பிங் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசிப் பொருத்தப்பட்ட நாய்களை மாநகராட்சி தொடர்ந்து கண்காணிக்கும். பூனைகளுக்கு மைக்ரோசிப்பிங் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பூனைகளுக்கும் வெறிநோய் தடுப்பூசி (Anti-rabies vaccine) போடுவது கட்டாயமாகும். இந்த 6 கால்நடை மருத்துவமனைகளிலும், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் இலவசமாக போடப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செல்லப்பிராணிகள் உரிம விதிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWA) மூலம் மாநகராட்சி வருவாய் துறை மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாநகராட்சி இதுவரை 12,000 தெருநாய்களுக்கு மைக்ரோசிப்பிங் செய்துள்ளது. நகரத்தில் சுமார் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 5 மையங்களில் தினசரி 100 தெருநாய்களுக்கு மட்டுமே பிறப்புக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் (ABC) செய்யப்படுகின்றன. ஜனவரியில் 10 புதிய விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு மையங்கள் திறக்கப்பட்டால், ஒரு நாளைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை எண்ணிக்கை 400 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.