ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்றதாக ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை, நேற்று அமலாக்கத்துறையினர், பிலாயில் வைத்து அமலாக்கத்துத்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே காங்கிஸ் அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரை கைது செய்துள்ளதுடன், அவர்களின் சொத்துக்களையும் முடக்கியுள்ள அமலாக்கத்துறை தற்போது முன்னாள் முதல்வரின் மகனை கைது செய்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தியது. அப்போது முதல்வராக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல் பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில், மாநில மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாகவும், இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.2,100 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில்,முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கவாசி லக்மா, ராய்ப்பூர் மேயரும், காங்கிரஸ் தலைவருமான ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரர் அன்வர் தேபர், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனில் துதேஜா, இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி மற்றும் சிலரையும் அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்தது. அத்துடன் ரூ.205 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்த நிலையில் துர்க் மாவட்டம், பில்லாய் பகுதியில் உள்ள பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல், சைதன்யா பாகலின் நெருங்கிய நண்பர் என கூறப்படும் லட்சுமி நாராயண் பன்சால் என்கிற பப்பு பன்சால் மற்றும் சிலரின் வீடுகளில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த மார்ச் 10 ஆம் தேதி அன்று சோதனை செய்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது சைதன்யா கைது செய்யப்பட்டுள்ளார். சைதன்யா பாகேல் பில்லாய் பகுதியில் உள்ள தனது தந்தை பூபேஷ் பாகல் வீட்டில் வசித்து வந்த நிலையில், மதுபான ஊழலில் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகல் ஆதாயம் அடைந்திருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகப்படுவதால் அவரது வீடு உள்ளபட மாநிலம் முழுவதும் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனையை மேற்கொண்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனை விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, புகாரளிக்கப்பட்ட மதுபான ஊழல் தொடர்பாக விசாரித்து வரும் சத்தீஸ்கர் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சமீபத்தில் மதுபான கொள்கையில் ரூ.3,200 கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், 22 மதுவிலக்கு துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில், மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை, நேற்று (வெள்ளிக்கிழமை) பிலாயில் வைத்து அமலாக்கத்துத்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல், அமலாக்கத்துறை, தனது மகனின் பிறந்தநாளுக்கு பரிசு அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சாடியுள்ளார். மேலும், இதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று குற்றம் சாட்டியுள்ளதுடன், ராய்கர் மாவட்டத்தின் தாம்னார் தாலுகாவில் அதானி குழுமத்தால் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரச்சினையை எழுப்புவதைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று அதிகாலை பூபேஷ் பகேலின் பிலாய் இல்லத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்தவுடன், அவரது அலுவலகம் சார்பில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமலாக்கத்துறை வந்துவிட்டது. இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள். அதானிக்காக டம்னாரில் மரங்கள் வெட்டப்படுவது குறித்த பிரச்சினை இன்று எழுப்பப்பட இருந்தது. பிலாய் நிவாஸ் ஐயா அமலாக்கத்துறையை அனுப்பியுள்ளார்.” என்று பதிவிட்டு இருந்தார்.

இதன் பின்னர், பிலாய் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகேல், “அவர்களின் எஜமானரை (அதானியை) திருப்திப்படுத்த, மோடியும் ஷாவும் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பியுள்ளனர். நாங்கள் பயப்படவோ, தலைவணங்கவோ போவதில்லை. இதை எதிர்த்துப் போராடுவோம். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் பூபேஷ் பாகேல் பயப்பட மாட்டார், தலைவணங்கவும் மாட்டார். ஒருபுறம், பீகாரில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள், ஜனநாயகம் பறிக்கப்படுகிறது.
மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்குவதற்கு அவர்கள் இ.டி, ஐ.டி, சி.பி.ஐ மற்றும் டி.ஆர்.ஐ ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், நம் நாட்டு மக்கள் இப்போது நன்கு அறிந்திருக்கிறார்கள். இ.டி கடந்த காலத்திலும் வந்து எங்களது இடத்தை சோதனை செய்து என் வீட்டில் ரூ.33 லட்சத்தைக் கண்டுபிடித்துள்ளது. இப்போது அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். இதன் அர்த்தம் என்ன? அவர்கள் எங்களை நம்புகிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்; நாங்கள் ஜனநாயகம் மற்றும் நீதித்துறையை நம்புகிறோம். அவர்கள் (பா.ஜ.க) விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்போம்.” ” என்று அவர் தெரிவித்தார்.