வக்ஃப் சட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது.

தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் பகுதியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய மதசார்பற்ற முன்னணி (Indian Secular Front – ISF) கட்சித் தலைவரும் பங்கார் எம்.எல்.ஏ.வுமான நௌஷாத் சித்திக் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர்.

இருந்தபோதும் ஏராளமான தொண்டர்கள் கூடிய நிலையில், கூட்டம் தடுப்புகளை உடைத்து முன்னேறியது, போலீசார் அவர்களை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் சில போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் போது பல போலீசார் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஏராளமான ஐ.எஸ்.எப். கட்சி தொண்டர்களின் மண்டை உடைந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து ஏராளமான தொண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.