முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிப்பதற்கான டெண்டரை நிர்வாகக் காரணங்களுக்காக, டெல்லி அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான பங்களா எண். 1, புதுப்பிக்கப்பட்டு வருகிறது, இதற்காக பொதுப்பணித் துறை சமீபத்தில் டெண்டர்களை அழைத்திருந்தது.

புதுப்பித்தல் முக்கியமாக மின் சாதனங்களை மாற்றுவதை உள்ளடக்கும். இதற்கான ஏலம் ஜூலை 4 ஆம் தேதி தொடங்கும் என்றும், டெண்டர் அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ரேகாவுக்கு இரண்டு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் பங்களா எண் 1 இல் தங்குவார் என்றும் பங்களா எண் 2 ஐ முகாம் அலுவலகமாகப் பயன்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

ஜூன் 28 அன்று டெண்டர் கோரப்பட்டது. மொத்தம் ₹60 லட்சம் மதிப்புள்ள இந்த டெண்டரில், ₹9.3 லட்சம் மதிப்புள்ள ஐந்து டிவிக்கள் நிறுவப்பட உள்ளன. ₹7.7 லட்சம் மதிப்பில் 14 ஏர் கண்டிஷனிங் யூனிட்களும், ₹5.74 லட்சம் மதிப்பில் 14 சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட உள்ளன. ₹2 லட்சம் மதிப்புள்ள UPS நிறுவப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, ரிமோட்களுடன் கூடிய 23 மின்விசிறிகள் ₹1.8 லட்சம், டோஸ்ட் தயாரிக்கும் கிரில் (₹85 ஆயிரம்), தானியங்கி சலவை இயந்திரம் (₹77 ஆயிரம்), பாத்திரங்கழுவி (₹60 ஆயிரம்); ஒரு கேஸ் அடுப்பு (₹63 ஆயிரம்), ஒரு மைக்ரோவேவ் அடுப்பு (₹32 ஆயிரம்) மற்றும் ஆறு கீசர்கள் (₹91 ஆயிரம்) நிறுவப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 115 விளக்குகள் நிறுவப்பட வேண்டும். இதில் சுவரில் பொருத்தப்பட்ட மற்றும் தொங்கும் விளக்குகள் மற்றும் மூன்று பெரிய ஜூமர்கள் அடங்கும். இதற்காக துறை ₹6.03 லட்சம் ஒதுக்கியுள்ளதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், நிர்வாக காரணங்களைக் காட்டி இந்த டெண்டரை டெல்லி அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

14 ஏ.சி. 115 மின்விளக்குகளுடன் ₹60 லட்சம் செலவில் டெல்லி முதல்வரின் இல்லம் புதுப்பிக்கப்படுகிறது…

[youtube-feed feed=1]