ராஞ்சி

ஜார்க்கண்ட் அமைச்சர் பதவியில் இருந்து சாம்பாய் சோரன் விலகியதால் ராம்தாஸ் சோரன் அமைச்சராகி உள்ளார்.

முன்பு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் சம்பாய் சோரன், சுமார் 5 மாதங்கள் முதல்வர் பதவியில் இருந்தார்.

ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தபோது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்தார்.

ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்திருப்பதாக சம்பாய் சோரன் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார்.

சம்பாய் சோரன் பதவி விலகியதால், கட்சிலா தொகுதி எம்.எல்.ஏ. ராம்தாஸ் சோரன் இன்று மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். ராம்தாஸ் சோரனுக்கு ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.