பெங்களூரு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக அரசியலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது/

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளநிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே பனிப்போர் நீடிக்கிறது. இதையொட்டி இருவரும் கடந்த 7-ம் தேதி டெல்லிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை தனித்தனியாக சந்திக்க அனுமதி கோரியுள்ளனர். ராகுல் காந்தி அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு பெங்களூரு திரும்பினர்.
நேற்று மீண்டும் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் டெல்லிக்கு சென்று இருவரும் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டு இப்போதும்அவர் நேரம் ஒதுக்கவில்லை என்பதால் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவை சந்தித்து பேசினர். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரையும் ராகுல் சந்திக்க மறுத்த விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து,
‘‘சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் முதல்வர் பதவிக்காக மோதிக்கொள்வது காங்கிரஸ் ஆட்சிக்கு மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே இருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்”
எனத் தெரிவித்துள்ளார்