சென்னை: மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், அதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துளளார்.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பாம்பன் புதிய பாலம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றி பிரதமர் மோடி, மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும். அழுது கொண்டே இருப்பவர்களால் அழுது கொண்டு மட்டும்தான் இருக்க முடியும் என தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2004-14ஐ விட 2014-24 தமிழ்நாட்டுக்கு அதிகமான நிதி வழங்கி உள்ளதாக பிரதமர் மோடியும் ஒன்றிய அமைச்சர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ‘பொருளாதார அளவுகோல்’ என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
முதல் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரைக் கேட்டால் கூட இதைச் சொல்வார். GDP, ஒன்றிய பட்ஜெட், அரசின் செலவினம் என அனைத்தும் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் அதிகமாகத்தான் இருக்கும். எண்கள் என்ற அடிப்படையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. ஒட்டுமொத்த GDP, செலவினத்தின் விகிதாச்சார அடிப்படையில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள். தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா?,” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். சற்றுநேரம் முன்பு தான் அயோத்தி ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன. தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஒட்டுமொத்த தேச மக்களுக்கும் ராம நவமி தின நல்வாழ்த்துகள். இன்று ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இன்று ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ஒப்படைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ராமேஸ்வரம் பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமியாகும். பாம்பன் பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்து பாலம்.
ஆன்மிகமும், அறிவியலும், ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல்கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பம், பாரம்பரியத்தை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளே காரணம்.
புதிய ரயில் திட்டங்களால் ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிணைந்தால் நாடு வளர்ச்சி, வலிமை பெறும். சுற்றுலா, வணிகத்திற்கு பதிய பாம்பன் பாலம் வழிவகை செய்யும். நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த திறனும் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு 7 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும். அழுது கொண்டே இருப்பவர்களால் அழுது கொண்டு மட்டும்தான் இருக்க முடியும்.
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் ரயில்வே துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சியில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கூட மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. ஏழை மக்களுக்கு 12 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்ட மூலம் ஒரு கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். மருந்துகள் வாங்க வேண்டுமென்றால் மக்கள் மருந்தகத்தில் வாங்குங்கள். மக்கள் மருந்தகங்களில் 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் 1400 க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் மருந்தகம் மூலம் ரூ. 700 கோடி மக்கள் சேமித்துள்ளனர்.