பெங்களூரு: பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்றுமுதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அமைதியும், வளமும் நிறைந்த மிகப்பெரிய நாடு இந்தியா என்றும், இது மற்றொரு மகா கும்பமேளா என்றும் புகழாரம் சூட்டினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஏரோ இந்தியாவின் 15வது கண்காட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமான பயிற்சி நிலையத்தில் தொடங்கி உள்ளது. இந்த ‘ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்று முதல் 14 ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 5 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் விமான படையின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிலையில், இந்த விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை (பிப்ரவரி 10, 2025) யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். ஐந்து நாள் நிகழ்வின் தொடக்க விழாவில் பல்வேறு விமானங்கள் பங்கேற்ற விமானப் பயணமும் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கான தயாரிப்பாக, யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானங்கள் ஏற்கனவே ஒத்திகை விமானங்களைத் தொடங்கியுள்ளன.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. மற்றொரு கும்பமேளா ஏரோ இந்தியாவில் தொடங்கியுள்ளது.
பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா மனதை சுயபரிசோதனை செய்யவும், உள்நாட்டு ஒற்றுமைக்காகவும் நடக்கிறது.
ஏரோ இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவானது, ஆராய்ச்சிக்காகவும், அயலக பாதுகாப்பிற்காகவும் நடக்கிறது.
பிரயாக்ராஜ் கும்பமேளா நமது கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. ஏரோ இந்தியா கும்பமேளா, இந்தியாவின் வலிமையை வெளிக்காட்டுகிறது.

ஒரு கையில் கலாசாரத்தையும், ஆன்மீகமும், மறு கையில் வீரத்தையும் கொண்டிருக்கிறோம். வளர்ச்சி, பாரம்பரியம் என்ற பிரதமர் மோடியின் முழக்கம் தற்போது நடந்து வருகிறது. இது இந்தியாவை தவிர வேறு எங்கும் நடக்காது.
ஏரோ இந்தியா கண்காட்சியானது, பரஸ்பர உறவு மற்றும் மரியாதை மேம்படுத்துவதற்கான தளமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பில் வலுவிழந்து காணப்படும் எந்த நாட்டிலும் அமைதியை நிலைநாட்ட முடியாது. அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியை நிலைநாட்ட முயற்சிப்போம். அமைதியும், வளமும் நிறைந்த மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
இ வ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விமான கண்காட்சியில் இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது.