டெல்லி

பிரதமர் மோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில்,

”சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பேசிய பிரதமர் மோடி கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இருப்பதாக கூறினார்.

இன்று அதே மும்பையில் ஒருசில காலியிடங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கூட்டம் பெருமளவு திரண்டு வந்த வீடியோ ‘வைரல்’ ஆகியுள்ளது.

அதற்கு முன்பு, குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர். அதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இவற்றையெல்லாம் பார்த்தால், முந்தைய சாதனை நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதீத வேலைவாய்ப்பின்மை என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. நாடு சரித்திர வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது.

எனவே, வெற்று வாக்குறுதிகள் அளிப்பதையும், திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, இளைஞர்களை பற்றி சிந்திக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு வலியுறுத்துகிறோம்.”

என்று பதிவிட்டுள்ளார்.