சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பா.ஜ.க. ஆளும் அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது இங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் கடும் போட்டி நிலவி வருகிறது.

மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக். 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 1,559 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவை பரீசிலிக்கப்பட்டு 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. பின்னர் பலர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இறுதியாக  1,031 வேட்பாளர்கள் கடத்தில் உள்ளனர். இங்கு 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்,   8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை, பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) ஒரு கூட்டணியாகவும், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது. தவிர ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தனித்தனியாக களம் காண்கின்றன.

பாஜகவின் முதல்வர் முகமாக, தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரஸின் முதல்வர் முகமாக பூபேந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர். இங்கு,  விவசாயிகளின் பிரச்னை, வேலையின்மை, அக்னிவீரர் திட்டம், பணவீக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் என எல்லா துறைகளிலும் பஞ்சாயத்துகள் வெடித்து கிளம்பியுள்ளன.

விவசாயிகளை பொறுத்தவரை, மோடி 2.O அரசின்போது கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற டெல்லி போராட்டத்தில், ஹரியானா விவசாயிகளின் பங்கு அளப்பரியதாக இருந்தது. சமீபத்தில் கூட கங்கனா ரனாவத் வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது, தங்களுக்கும், ரனாவத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த மாநிலத்தில் வேலையின்மை, தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என்று இம்மாநில இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பிரச்னை இம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த பிரச்னைக்கு எதிராக குரல் கொடுத்த வினேஷ் போகத் தற்போது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

மட்டுமல்லாது, கேலோ இந்தியா விளையாட்டுகளுக்காக குஜராத்துக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள ஹரியானா மாநிலத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்காக இன்றுடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைகிறது. அக்.5ம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்.8ல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.