டெல்லி: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்புதலை  மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. இந்த ஏவுதளத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஜனவரி 16ந்தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 8வது ஊதியக்குழு அமைப்பது  உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுஉள்ளது. அதன்படி,  த்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே இரண்டு விண்வெளி ஏவு தளங்கள் செயலாற்றி வருகின்றன. அதன்படி,   FLP மற்றும் SLP என்ற இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. இதில் முதல் ஏவுதளம் அமைத்து 30 ஆண்டுகளும் இரண்டாவது ஏவுதளம் அமைத்து 20 ஆண்டுகளும் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் 3வது ஏவுதளம் அமைக்க வேண்டும் என இஸ்ரோ கோரிக்கை வைத்திருந்தது. இதுகுறித்து மத்தியஅரசு ஆய்வு செய்த நிலையில்,  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சதீஷ் தவான் விண்வெளிய் ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாவது புதிய ஏவுதளத்திற்கு TLP என்று பெயர் வைக்கபட்டுள்ளது. இந்த ஏவுதளத்தை அமைக்க ரூ.3984.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. TLP ஏவுதளம் முழுமையாக கட்டி முடிக்கப்பட 4 ஆண்டுகள் ஆகும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

TLP ஏவுதளமானது SLP தளத்தின் செயல்பாடுகளைப் பங்கிடுவதுடன், அடுத்த தலைமுறை ராக்கெட்களையும் விண்ணில் ஏவும் வசதியுடன் கட்டமைக்கப்படவுள்ளது. இந்த புதிய TLP ஏவுதளம் இஸ்ரோவின் திறனை அதிகரிக்கும் என்றும்,   இந்த ஏவுதளத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவும், மற்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.