பிலாஸ்பூர்

நைனி ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க உத்தரகாண்ட் மாநிலத்தில் செய்த சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவற்றை தண்டவாளத்தில் வைத்து சதி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்ட போது தண்டவாளத்தில் பொருள்கள் இருப்பதைக் கண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தும் சிலிண்டரில் ரயில் மோதியுள்ளது. ஆயினும் சிலிண்டர் வெடிக்காததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதைப் போல் கடந்த வாரம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்த் இதுபோன்ற ரயில் கவிழ்ப்பு சதி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து நைனி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் கிடைத்தனின் பேரில் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ரயிலை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்னர், தண்டவாளத்தில் இருந்து இரும்புக் கம்பி எடுக்கப்பட்டப் பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.