மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி  மற்றும்  குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா  கடந்த 28-ஆம் தேதி  மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியா்களின் வேத மந்திரங்கள் முழங்க, லட்சாா்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து புதன், வியாழக்கிழமைகளில் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

இன்று இறுதியான தேவர் ஜெயந்தி குரு பூஜையையொட்டி,  இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்  நேற்று  இரவு மதுரைக்கு வருகை தந்தார். இதையடுத்து,  இன்று  நடைபெற்ற தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு முன் வைக் கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டி யர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதல்வரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு சாலை வழியாக புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வா் வருகையையொட்டி, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.