கோவை

கோவை சிவானந்தா காலனி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இடி-மின்னலுடன் 2 மணி நேரம் நேற்று பலத்த மழை பெய்ததால் அவினாசி சாலை, திருச்சி சாலையில் மழைநீர் ஆறுபோன்று ஓடியது. தண்ணீர் அனைத்தும் கோவை ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியது.

கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையும் தண்ணீரில் மூழ்கியது. எனவேஅந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

சிவானந்தாகாலனியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றபோது பிரஸ் காலனியில் இருந்து காந்திபுரம் நோக்கி 35 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றது.

பேருந்து அந்த சுரங்கப்பாதை வழியாக சென்றபோது அங்கு அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கயிறு கட்டி, பஸ்சுக்குள் இருந்த 35 பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.