சென்னை

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசி விமர்சித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது சமூக வலைத்தளத்தில்,

“நேற்று முன் தினம் ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியது போல் வேறு எந்த பிரதமரும் இவ்வளவு மூர்க்கத்தனமான தகவல்களைக் கூறியதாக என்னால் நினைவு கூறமுடியவில்லை. மோடி கூறிய ஒவ்வொரு வாக்கியமும் முந்தைய வாக்கியத்தை முழுமையான பொய்யிலும், வெட்கக்கேடான கொடுமையிலும் மிஞ்சியதாக உள்ளது. 

பொதுமக்களின் நிலம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை முஸ்லிம்களுக்குப் பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் எப்போது, எங்குக் கூறியது?, மேலும் தனிநபர்களின் சொத்துக்கள், பெண்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி ஆகியவற்றை எப்போது, எங்கு மதிப்பிடுவது என்று கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியது? மேலும் அரசு ஊழியர்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் பணமும் எப்போது, எங்கு விநியோகிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியது? என்று பா.ஜனதா உலகுக்குச் சொல்லுமா? 

தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது பிரதமர் மோடி கொஞ்சமாவது மரியாதை வைத்திருக்கவேண்டும். கடந்த டிசம்பர் 2006-ல் தேசிய மேம்பாட்டு கவுன்சிலுக்கு மன்மோகன் சிங் ஆற்றிய உரை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அப்போது வளங்கள் மீதான முதல் கோரிக்கை ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் உள்ளது என்றுதான் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் மோடி அவரது வார்த்தைகளைத் திரித்துப் பேசுவது அவதூறானது. ஏப்ரல் 21 ஆம்-தேதிக்குப் பிறகு விவாதத்தின் அளவு ஒரு புதிய தாழ்வுக்குச் சென்றுவிட்டது ஓர் அவமானம் ஆகும்” 

என்று பதிவிட்டுள்ளார்.