தராபாத்

பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதற்கு ஐதராபாத் தொகுதி எம் பி அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துளார்.

ஏற்கனவே என் சி இ ஆர் டி 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தைத் திருத்தி,  “பாப்ரி மஸ்ஜித்” என்ற வார்த்தையை நீக்கியது சர்ச்சையானது.  தற்போது புதிய பாடப்புத்தக பதிப்பில் “மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு” எனக் குறிப்பிடப்பட்டு  குஜராத்தில் சோம்நாத்தில்  இருந்து அயோத்தி வரையிலான பாஜக  ‘ரத யாத்திரை’, பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதற்கு பின் நடந்த வகுப்புவாத வன்முறையில் கர சேவகர்களின் பங்கு உள்ளிட்ட பலப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பாக என்சிஇஆர்டி செயல்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஐதராபாத் தொகுதி எம் பி யும், ஏ எம் ஐ எகட்சித் தலைவர்மான அசாதுதீன் ஒவைசி இது குறித்து  தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓவைசி,

“என்சிஇஆர்டி பாபர் மசூதியை  ‘மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு’ என்று பதிப்பிட்டுள்ளது.  அயோத்தி தீர்ப்பை ‘ஒருமித்த கருத்து’ என்றும் தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு ஒரு “மிகப்பெரிய குற்றச் செயல்” என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

1949ல் இயங்கி வந்த மசூதி மூடப்பட்டு, 1992ல் ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது என்பதை இந்திய குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.  இந்திய குழந்தைகள் குற்றச் செயல்களை புகழ்ந்து வளரக்கூடாது”

என்று பதிந்துள்ளார்.