சென்னை

பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்திருந்தனர். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்பள்ளியின் மாற்றத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. சென்னையில் இது குறித்து பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்சம்பவம் கண்டனத்துக்குரியது எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினர் மகாவிஷ்ணுவுக்கான பின்புலம், வருமானம், இவரது யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ பதிவுகள், ஏற்கனவே எங்கெங்கு உரையாற்றி உள்ளார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். மகாவிஷ்ணு சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

சிட்னியில் இருந்து விசாரணைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று மகாவிஷ்ணு மீது 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.