மதுரை: மதுரையில் மழை வெள்ளத்தை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். பல பகுதிகளில் அமைச்சர்கள் பிடிஆர், மூரத்தி ஆகியோர் நேரடி ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  கடந்த 24ந்தேதி இரவு மற்றும் 25ந்தேதி பகலில்  வரலாறு காணாத அளவில் பலத்த மழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதுபோல சுமார் 2மணி நேரம் பெய்த மழை காரணமாக மாவட்டமே மழை வெள்ளத்தில் தத்தளித்தது.   சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டதுடன்,  தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.  பல பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மதுரையின் புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதன் காரணமாக மதுரையில் விரைந்து மழை நீரை அகற்றவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும் துணை முதல்வர் உதயநிதியும் மதுரை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில்,   மதுரையில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், வைகை ஆற்றில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆய்வு செய்தனர். அவருடன் மாவட்ட கலெக்டர், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி  மதுரையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தக்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும்  உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற இன்னும் 3 நாட்கள் ஆகும்  கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பந்தல்குடி வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அங்கு இன்னும் வெள்ளம் வடியவில்லை என  தெரிவித்தார்.  மழையால் பாதிக்கப்பட்வடர்கள்  100 முதல் 150 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தண்ணீர் விரைந்து வடிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.