சென்னை: தீபாவளியையொட்டி,  பயணிகளின் வசதிக்காக சென்னையில் 300 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள் இடையே அடுத்தடுத்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி திருநாளை  முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும். வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில்  இன்று முதல் ( 28.10.2024 ) 30.10.2024 வரையிலான 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

2. கோயம்பேடு பேருந்து நிலையம்

3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும், எதிர்வரும்  தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 300 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களில் இயக்கபட உள்ளது.

மேலும், தீப ஒளி திருநாளை முடித்து ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக 02.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 03.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மாலை மற்றும் இரவுப்பணி (PM & Night Shift) 100 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.