சிவகங்கை: உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் பரவலாக மழை பெய்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பும், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகள், ஏரிகள், அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயமும் செழித்தோங்கி உள்ளது.
இந்த நிலையில், அரசின் கெடுபிடிகள் மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நேற்று (செப் 19) சிவசங்கை பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு ரூ. 205 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சுற்றுவட்ட சாலை பணிகளைசெய்தனர். பின்னர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையேயான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை குழுவில் சட்டமன்ற குழு தலைவர் காந்தி ராஜன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை அதிகாரிகள் முறையாக திறந்து விடுவது இல்லை என்று குற்றம் சாட்டியதுடன், முல்லைப்பெரியார் கால்வாய் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வருவது இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், விவசாய பணிக்காக இலவச மின் இணைப்பு பெறுவதற்கு பத்து ஆண்டுகள் காத்திருந்து வருகிறோம், இதுவரை மின் இணைப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும், விவசாயம் செய்திட கரம்பை, வண்டல் மண் எடுக்க அரசு அதிகாரிகள் கடுமையான கெடுபிடிகள் செய்வதாக குற்றம் சாட்டியதுடன், கிராமத்தில் உள்ள கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.