சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை வரும் அக்டோபர்.15 ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. எனவே மழைக்கு முன்பாக சாலைப்பணிகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கால்வாய் பணிகளையும் விரைவுப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்த்நது, அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழையை காட்டினாலும், வடகிழக்கு பருவ மழையால் தான் அதிக மழை கிடைக்கும். அதேநேரம் வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அதிக மழை பெய்தால் சென்னை வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாகவே உள்ளது. இதை தடுக்க பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதாக ஆட்சியாளர்கள் கூறினாலும், இன்றுவரை சென்னையில் மழைநீர் தேங்குவதை முழுமையாக தடுக்க முடியாத நிலையே உள்ளது. இதனால் நடப்பாண்டு, சென்னையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட மின்சார பம்புசெட்டுகள் தயாராக வைக்கப்பட்டஉ ள்ளது. மழைநீர் தேங்கும் பகுதியில் இருந்து உடனுக்குடன் அதை வெளியேற்றும் வகையில் பம்புசெட்டுகள் உள்பட பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட உள்ளன.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதைத்தொர்ந்து, தமிழக அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு மழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது,
* மழை நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு வசதியாக மழை நீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி வைக்க வேண்டும்.
* நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக், மணல் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
* சாலைகளில் தோண்டப்பட்ட அனைத்து பள்ளங்களும் மூடப்பட வேண்டும்.
* பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும்.
* அனைத்து சாலை பணிகளையும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்
.* மழைக்கு சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
* மழைக்கு விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை முன்பே கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் மூலம் அகற்ற வேண்டும்.
* பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய சாலைகள், ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
* மழைக்காலத்தில் குடிநீர் வினியோகம் தடைபடக் கூடாது. சீரான வினியோகம் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
* நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்க வேண்டும். அதே வேளையில் இந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
* வார்டு வாரியாக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தை தேர்வு செய்து வைத்து கொள்ள வேண்டும்.
* கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு அதனால் வரும் நோய்களை முற்றிலும் தடுக்க வேண்டும்.
* நகர்ப்புற சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும்.
* மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.