திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள  மக்கள்  சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர்.  மேலும் அந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் (NiV) என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும், அதாவது இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது,  குறிப்பாக வவ்வால் மூலம் பரவுகிறது.  மேலும் இது முதன்முதலில் 1998 இல் மலேசியாவில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து பல நாடுகளிலும், இந்தியாவிலும் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. ஏற்கனவே கேரளாவில்,  கடந்த 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கம் பதிவானது. அதன்பின் இதுவரை 5 முறை நிபா வைரஸ் பரவல் பதிவாகியிருக்கிறது. அதிலும், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6 பேர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்கள். 2018இல் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், 2019 கொச்சியைச் சேர்ந்த ஒருவரும், 2023இல் கோழிக்கோடை சேர்ந்த நான்கு பேரும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் தொற்று பரவி உள்ளது.  கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த செப்.4ஆம் தேதி நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட 24 வயது மாணவர் 5 நாள்களுக்கு பின் உயிரிழந்தார் என மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். அவருடைய ரத்த பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது செப்.9ஆம் தேதி உறுதியானது.

முன்னதாக  மலப்புரத்தில் கடந்த ஜூலை மாதம் 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது இது இந்தாண்டின் இரண்டாவது உயிரிழப்பாகும்

. இதன்மூலம், 2018இல் தொடங்கி தற்போது வரை கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் 22 பேர் உயிரிழந்தனர். அதாவது மொத்தம் 28 பேர் பாதிக்கப்பட்டு 6 பேர் மட்டுமே அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்து 150 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்,  மலப்புரம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுபாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வணிக ரீதியிலான கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மட்டும் விதிவிலக்கானவை.

மலப்புரத்தில் உள்ள திருவாலி கிராம பஞ்சாயத்தின் வார்டு 4,5,6,7 மற்றும் மாம்பட் கிராம பஞ்சாயத்து வார்டு 7 ஆகியவற்றில் உள்ள திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள், இஸ்லாமியர்களின் மதராஸாக்கள், டியூஷன் மையங்கள் ஆகியவை அடுத்த அறிவிப்புகள் வரும் வரை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலப்புரம் மட்டுமின்றி கேரளாவின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் அறிவக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், பொது இடங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தவும்,

சானிட்டைசர் அனைத்து இடங்களிலும் கிடைப்பதை உறுதிசெய்யவும் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, மூச்சுக்குழாய் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிகுறிகள் தென்படுபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதும் அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவேளை உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்கள் அமரும் முறையை மாற்றியமைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகள், குழு சார்ந்த செயல்பாடுகள், காலை அசம்பிளி போன்ற ஒன்றுகூடல்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகுப்பறைகள், உணவு உண்ணும் கூடங்கள், நூலகங்கள் ஆகியவற்றை ஒருநாளில் பலமுறை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் குறித்து அனைத்து வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.