சென்னை: நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்டு 3ந்தேதி) நீட் முதுநிலை தேர்வு  நடைபெற்ற நிலையல் தேர்வு எழுதியவர்களுக்கு  தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான ‘நீட்’ தோ்வுக்கு தமிழகத்தில் 25 ஆயிரம் போ் உள்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவா்கள் விண்ணப்பித்தனா். இந்தநிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஒரே கட்டமாக ஆக. 3-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்.)  முக்கிய அறிவிப்பு ன்றை வெளியிட்டுள்ளது. அந்த  அறிக்கையில், நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்கள் தேர்வு உள்ளடக்கம் எதையும் எந்தவொரு காரணத்துக்காகவும் பகிரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ டிஜிட்டல் வழியிலோ அல்லது பிற வழிகளிலோ தேர்வில் கேட்கப்பட்ட விவகாரங்களைப் பற்றி பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ தேர்வர்கள் பகிரவோ வெளியிடவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் எனவும், அவரது தேர்வு தகுதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தேர்வெழுதியவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர் என யரிடமும் தேர்வு குறித்த விவரங்களை சமூக ஊடகங்களிலும் பிற வழிகளிலும் பகிர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.