மதுரை:   தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக  மே 20ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத்தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு  இந்த முறை தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் நடைபெற்று வருகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில்,   இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங் களை விவாதித்து வருகின்றனர். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்,  சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் தமுக்கம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”வகுப்புவாத சக்திகள், கார்ப்பரேட்களுடன் இணைந்து மக்களை பிளவுபடுத்தும் சித்தாந்தத்தைப் பரப்புகின்றன. பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்று முறை மத்தியில் ஆட்சியில் இருப்பதால், ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவார் மாநில அதிகாரத்தை அணுகும் வாய்ப்பைப் பயன்படுத்தி, மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் ஊடுருவி, முழு சமூகத்தையும் வகுப்புவாத மயமாக்குகின்றன.

இந்துத்துவா சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு, கட்சியின் முழுமையான பலத்தை கட்டியெழுப்புவது அவசியம். இதற்காக, வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் அழைப்பு விடுக்கின்றன.

இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதோடு ஆர்எஸ்எஸ் பாஜகவின் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையத் தயாராக உள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளையும் அணி திரட்ட வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதங்களை உருவாக்குவதற்காக, அகில இந்திய மாநாட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானத்தில் 3,424 திருத்தங்களும் 84 பரிந்துரைகளும் பெறப்பட்டன. இவற்றில் 133 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஏப்ரல் 2ஆம் தேதி அன்று நடைபெற்ற மாநாட்டில் இரண்டு தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  அதன்படி,

வரும் மே 20ஆம் தேதி அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம் என்பது முதல் தீர்மானமாகும்.

தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கட்சி மாநாடு தனது முழு ஆதரவை வழங்கியதுடன், பொது வேலைநிறுத்தத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு அதன் அனைத்து பிரிவுகளுக்கும் அழைப்பு விடுத்தது.

ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்க பரிவாரின் கொடூரமான வகுப்புவாத தாக்குதல்களை எதிர்த்தல் என்பது இரண்டாவது தீர்மானமாக மாநாட்டில் ஏற்கப்பட்டு நிறைவேற்ற ப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.