சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  97-வது பிறந்த நளை முன்னிட்டு, சென்னை  அடையாறு பகுதியில் அமைந்துள்ள சிவாஜி மணிமண்டபத்தில்,  சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை அடையார் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், சிவாஜி குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் புகைப்படக் கண்காட்சியும் இம்மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுவாமித நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், நடிகர் பிரபு,  அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.