மும்பை
மும்பை உயர்நீதிமன்றம் அதனியை பங்குச் சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன் மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. எனவே இதுகுறித்து தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பு (எஸ்.எப்.ஐ.ஒ.) 2012-ம் ஆண்டு கவுதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தது.
குற்றசதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானியை விடுவித்து இருந்தது. ஆயினும் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் செசன்சு நீதிமன்றம், மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இந்த ரத்தை எதிர்த்து தொழில் அதிபர்கள் 2 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செசன்சு கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
நீதிபதி ஆர்.என்.லத்தா அமர்வு முன் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்த போது மனுவை விசாரித்த நீதிபதி பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.