அமெரிக்காவில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி.

முன்னதாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க அரசில் சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் உலகின் முன்னணி தொழிலதிபர் எலோன் மஸ்க் ஆகியோரை மோடி சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமியையும் சந்தித்து பேசினார்.

அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவிவில், அதிபர் டிரம்புடன் “சிறந்த” சந்திப்பை நடத்தியதாகவும், அவர்களின் பேச்சுவார்த்தை “இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை சேர்க்கும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். இந்தியாவில், நாங்கள் ஒரு விக்சித் பாரதத்தை நோக்கிச் செயல்படுகிறோம். இது அமெரிக்க சூழலில் MIGA என மொழி பெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா ஒன்றாக செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன!” என்று மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

மோடியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில், வாஷிங்டன் புது தில்லிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.