சென்னை: தமிழ்நாடு அரசு  போக்குவரத்து துறையின் விரைவு போக்குவரத்துக் கழகத்தின்  மேம்பபடுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர்தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை, ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்திற்காக (OTRS) அமைச்சர் சா.சி. சிவசங்கர்  (23 செப்டம்பர் 2024) தொடங்கி வைத்தார்.

இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் TNSTC பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி, நாள்தோறும் 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில், பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது. இது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் முன்பதிவு செயல்முறையை சீராகக் குறைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட தளத்தின் முக்கிய அம்சங்கள்:

1. முன்பதிவை முடிக்க குறைவான பக்கங்கள்.

2. இருக்கைகள் தேர்வுக்கான கூடுதல் வடிகட்டி (Filters) விருப்பங்கள்.

3. அனைத்து பக்கங்களும் பதிலளிக்கும் தன்மையில் (Responsive).

4. அதிகரித்த இருக்கை எண்ணிக்கையில் முன்பதிவுகளை நிறைவேற்ற உயர்வீதம் கொண்ட இணைய இணைப்பு.

கைபேசி செயலி:

1. விருப்பமாக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை வேகமாக முன்பதிவு செய்யலாம்.

2. மேம்பட்ட பயனர் அனுபவம்.

இந்த மேம்படுத்தப்பட்ட முறைகள், தமிழ்நாடு பொதுப் போக்குவரத்து சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கின்றன. மேலும், பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

மேலும், மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 3 ஓட்டுநர்கள் மற்றும் 11 நடத்துநர்கள் என மொத்தம் 14 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 3 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் ஓட்டுநர் உடன் நடத்துநருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.