புதுக்கோட்டை

மிழக அமைச்சர் ரகுபதி அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் என அழைத்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம்,

”அதிமுகவினரின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. அக்கட்சியின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தகவல் ஊரெங்கும் பரவிவிட்டது. எனவே, இதை யாரும் மறுக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆபத்தான சூழலைச் சந்திக்கும் என மக்களவை தேர்தலுக்கும் முன்பே கூறினேன்.

அது, தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. எனவே, அங்கு இருக்கக் கூடிய உண்மையாக அதிமுக தொண்டர்கள், திமுகவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம். அவ்வாறு வருவோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவணைத்துக்கொள்வார். திராவிட இயக்கத்தை வழி நடத்தக்கூடிய ஒரே தலைவர் தமிழக முதல்-அமைச்சர் மட்டும்தான். ஆகையால்தான் உண்மையான அதிமுக தொண்டர்களை திமுகவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வாக்குகள் யாருக்கு சென்றுள்ளது என்பது அப்போது தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமறைவாக இருப்பதிலேயே அவர் தவறு செய்துள்ளார் என்பது தெரிகிறது. தைரியம் இருந்தால் அவர் வெளியே வரலாம். அவர் எந்த மாநிலத்துக்கு சென்றிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் காவல்துறை நிறுத்தும்”

என்று கூறினார்.