சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம்,

“ஆளுநர் ரவி, தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு, ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் இன்றைக்கு அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கமலாலயத்துக்கு போட்டியாக, ராஜ்பவன் டெல்லியின் சார்பாக அரசியல் செய்து வருகிறது. ஒரு ஆளுநர் இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இருக்கும் உறவினை உருவாக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால், நம் ஆளுநர் அந்த உறவை எந்தெந்த வகையில் துண்டிக்க முடியுமோ, அந்தந்த வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது.

ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர் போல மற்றும் நீட் தேர்வின் பிஆர்வோ போல் செயல்பட்டு வருகிறார். காந்தி மண்டபம் வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிக வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். காந்தி மண்டபத்தில் ஆளுநர் மற்றும் அவருடன் சென்ற கேமராமேன் கண்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் தெரிந்துள்ளது.

சென்னை மாநகராட்சி, காந்தி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் சிறப்பான சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாக குப்பை இருக்கும் இடமான மெரினா கடற்கரையை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளும் அரசாங்கம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.

வீட்டை நாம் பாதுகாப்பாக தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வீட்டில் ஒரு திருடன் புகுந்துவிட்டால் நம் வீட்டில் பாதுகாப்பு இல்லை எனக் கூறிவிட முடியாது. திருடன் வரும்பொழுது ஏன் பாதுகாப்பு குறைவாக இருந்தது? என்று கண்டறிவதை விட்டுவிட்டு, பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. அவருக்கும் தெரியும் காந்தியடிகள் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் இந்திய முழுவதும் பல சூதாட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தலித்துகள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள் என எந்த புள்ளிவிவரமும் கிடையாது. தலித்துகளை மட்டும் தாக்க வேண்டும் என எவரும் முயற்சி செய்யவில்லை. ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருவருக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாக தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அவர் அரசியல் செய்யும் காரணங்களால்தான் இங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் இருக்கும் எந்த ஆளுநரும் ஒரு பொதுக்கூட்டம் போல் மக்களை கூட்டி பேசியதில்லை.

நாங்கள் ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவர் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டுமே. ஆளுநர் ஆர்.என்.ரவி மேகாலயா, பீகார் போன்ற பல்வேறு வட மாநிலங்களுக்கு சென்று அங்கு பணியாற்றியுள்ளார். அவர் மனசாட்சியுடன் மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் இருக்கும் வித்தியாசத்தை பேச தயாராக இருக்கிறாரா? தமிழகத்தில் இருக்கும் சமத்துவத்துவத்தை போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.”

எனத் தெரிவித்துள்ளார்.